லண்டன் போராட்டங்கள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது?

பட மூலாதாரம், EPA / Shutterstock

படக்குறிப்பு, 'ஸ்டாண்ட் அப் டு இனவெறி' பிரச்சாரக் குழுவின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • எழுதியவர், நடியா சுலேமான்
    • பதவி, பிபிசி
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

லண்டனில் தொடங்கிய மற்றொரு தீவிர வலதுசாரி கூட்டம், பல தசாப்தங்களில் பிரிட்டன் கண்டிராத வகையில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாக மாறியது.

2025 செப்டம்பர் 13-ஆம் தேதி, தீவிர வலதுசாரியான டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த "யுனைட் தி கிங்டம்" பேரணிக்காக 1,10,000-க்கும் மேற்பட்டோர் மத்திய லண்டனில் கூடினர்.

யூனியன் ஜாக், பிரிட்டனின் செயின்ட் ஜார்ஜ் கிராஸ், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கொடிகளை ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக சோதித்தனர்.

முதலில் "சுதந்திர பேச்சு விழா"( "festival of free speech") என்று அறிவிக்கப்பட்ட இந்தப் பேரணி, விரைவில் இனவாத சதிக் கோட்பாடுகளை நோக்கி நகர்ந்து, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரமாக மாறியது.

மிகப்பெரிய அளவில் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், வன்முறை வெடித்தது. அதில், 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்தனர்.

இந்த நிகழ்வு, குடியேற்றம் எவ்வளவு தூரம் ஒரு பிரச்னையாக மாறியுள்ளது என்பதை நினைவூட்டுவதாக அமைந்தது. இது அடையாளம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்த ஆழமான முரண்பாடுகளையும் வெளிப்படுத்தியது.

பட மூலாதாரம், Christopher Furlong/Getty Images

படக்குறிப்பு, செப்டம்பர் 13, 2025 அன்று, மத்திய லண்டனில் குறைந்தது 110,000 பேர் கூடி 'யூனைட் தி கிங்டம்' பேரணியை நடத்தினர்.

வார இறுதியில் லண்டனில் ஏன் 110,000 பேர் அணிவகுத்துச் சென்றனர்?

குடியேற்றம் மீதான கோபம் மற்றும் நாட்டின் எல்லைகளில் அரசாங்கம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்ற கருத்தின் மீதான நம்பிக்கையால், லண்டனில் பெருமளவில் மக்கள் திரண்டனர்.

பல ஆர்ப்பாட்டக்காரர்கள், சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து, அகதிகளுக்கு தஞ்சமளிக்கும் விதிகளை கடுமையாக்குவதன் மூலம், பிரிட்டன் தனது "கட்டுப்பாட்டை மீட்டெடுக்க வேண்டும்" என்று கூறினர்.

பிரித்தானிய கலாசாரம் அழிந்து வருவதாகவும், அதைப் பாதுகாக்கவே தாங்கள் வந்ததாகவும் சிலர் தெரிவித்தனர்.

பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. குடியேற்றத்திற்கு எதிராகப் பேசும் சாதாரண மக்களுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை என்று பலரும் குறிப்பிட்டனர்.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை குறிவைத்து, கோஷங்கள் மற்றும் பதாகைகளுடன் பெரிய அரசியல் மாற்றத்திற்கான கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன.

ராபின்சனைத் தவிர, அமெரிக்க கோடீஸ்வரர் ஈலோன் மஸ்க் காணொளி மூலம் பங்கேற்றார்.

பட மூலாதாரம், Mark Kerrison/In Pictures via Getty Images

படக்குறிப்பு, 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தெற்காசிய சமூகம் பிரிட்டனின் இரண்டாவது பெரிய இனக்குழுவாகும்.

பிரிட்டனில் குடியேறிய தெற்காசிய சமூகத்தை இது எவ்வாறு பாதிக்கிறது?

2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிரிட்டனில் தெற்காசிய மக்கள் இரண்டாவது பெரிய இனக்குழுவாக உள்ளனர். இதில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர், சிங்களர்களும் நேபாளிகளும் சிறிய அளவில் உள்ளனர்.

போராட்டங்கள் கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் அகதிகளுக்கு தஞ்சமளிக்கும் கொள்கைகளை நோக்கி இருந்தாலும், பல தலைமுறைகளாக பிரிட்டனில் வாழும் இந்த தெற்காசிய சமூகங்கள் இதன் தாக்கத்தை உணர்கின்றன.

குறிப்பாக இஸ்லாம் மற்றும் சீக்கிய சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரங்கள் அதிகரித்து வருகின்றன.

2024-ல் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு சம்பவங்கள் புதிய உச்சத்தை எட்டியதாக 'டெல் மாமா' அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

கடந்த வாரம், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் இளம் சீக்கிய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை காவல்துறை "இன ரீதியாக தூண்டப்பட்ட தாக்குதல்" எனக் கருதுகிறது.

கடந்த சில மாதங்களாக, தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்பு குழுக்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள், சமூகத்தில் பயத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளன.

கடந்த வார இறுதி போராட்டங்களில், "வீட்டிற்கு திரும்புங்கள்", "சட்டவிரோதமாக வந்தவர்களை நாடு கடத்துங்கள்" என்ற பதாகைகள், வெறுப்பு மற்றும் எதிர்ப்பு உணர்வுகளை மேலும் தூண்டுவதாக இருந்தன.

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவது ஏன் ?

புலம்பெயர்ந்தோர் நீண்ட காலமாக பிரிட்டனின் மக்கள் தொகை, கலாசாரம் மற்றும் பொருளாதார அடையாளத்தை தகவமைத்து வருகின்றனர். ஆனால், பிரெக்ஸிட்-க்குப் பிறகு, தீவிர வலதுசாரி குழுக்கள் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான விரோதப் போக்கை அதிகரித்துள்ளன.

ரிஷி சுனக் அரசாங்கத்தின் கீழ் நிகர இடப்பெயர்வு புதிய உச்சத்தை எட்டியது, இது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பிரிட்டனின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் படி, 2022-ல் நிகர இடம்பெயர்வு (சட்டப்பூர்வமாக வருவோருக்கும் வெளியேறுவோருக்கும் இடையிலான வித்தியாசம்) 7,45,000 ஆக இருந்தது.

இது பிரெக்ஸிட்-க்கு முந்தைய அளவை விட மூன்று மடங்கு அதிகம்.

மார்ச் 2025-ல் முடிவடைந்த ஆண்டில், 1,09,343 பேர் பிரிட்டனில் புகலிடம் கோரி விண்ணப்பித்தனர், இது சமீப ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கைகளில் ஒன்று.

விண்ணப்பதாரர்களில் அல்பேனியர்கள் முதலிடத்தில் இருந்தனர், பின்னர் ஆப்கானியர்கள், பாகிஸ்தானியர்கள், இரானியர்கள் மற்றும் வங்கதேசத்ததவர்.

பட மூலாதாரம், Rasid Necati Aslim/Anadolu via Getty Images

படக்குறிப்பு, காவல்துறையினரின் கூற்றுப்படி, போராட்டத்தின் போது வன்முறை வெடித்து, அதில் இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்தனர்.

வளங்களின் பங்கீடு மற்றும் பொது பாதுகாப்பு குறித்த கவலைகளை தூண்டியுள்ள தவறான தகவல்கள், குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரசாரங்களை மேலும் தீவிரமாக்கியுள்ளன.

லண்டன், பர்மிங்காம் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள மக்கள்தொகையில், கிட்டத்தட்ட 40% புலம்பெயர்ந்தவர்கள். இதனால், அவர்கள் வாய்ப்புகளையும் வளங்களையும் கைப்பற்றுவதாக ஒரு உணர்வு பரவியுள்ளது.

தீவிர வலதுசாரிகள் இதை நாடு "முற்றுகையில்" இருப்பதற்கான அடையாளமாக சித்தரிக்கின்றனர்.

அதேநேரம், பொருளாதார அழுத்தங்கள், அதிகரிக்கும் செலவுகள், வீடுகள் பற்றாக்குறை, அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவை குடியேற்றத்தை எளிதாக குற்றம் சாட்டக்கூடிய இலக்காக மாற்றியுள்ளன.

தெருக்களில் வரையப்பட்ட யூனியன் ஜாக் கொடிகள், லண்டனில் நடைபெறும் அணிவகுப்புகள் போன்ற தேசியவாத சின்னங்கள் இந்த பதற்றங்களை வெளிப்படையாக காட்டுகின்றன.

பட மூலாதாரம், Vuk Valcic/SOPA Images/LightRocket via Getty Images

படக்குறிப்பு, ஸ்டாண்ட் அப் டு ரேசிசத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி சுமார் 5,000 மக்களை ஈர்த்தது,

இந்த சூழல் இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளதா ?

மிகப் பெரிய பிளவுகளையும், பதற்றமான கட்டத்தையும் நோக்கி பிரிட்டன் செல்கிறது என்பதை வார இறுதி நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

'ஸ்டாண்ட் அப் டு ரேசிசம்' அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சுமார் 5,000 மக்களை ஈர்த்தது. இது ராபின்சன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஒரு சிறிய பகுதி தான்.

இனவெறி எதிர்ப்பு இயக்கத்துடன் ஒப்பிடுகையில், குடியேற்ற எதிர்ப்பு இயக்கம் வேகமாக வலுவடைவதை இந்த வித்தியாசம் வெளிப்படுத்துகிறது.

லண்டனில் இவ்வளவு பெரிய பேரணி நடக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அதில், 26 அதிகாரிகள் காயமடைந்தனர், 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் நடந்த பல போராட்டங்களால், புகலிட விடுதிகளை விரைவாக மூடும் திட்டங்களை வேகப்படுத்துமாறு பிரிட்டன் அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

மறுபுறம், புகலிட விடுதிகள் மூடப்படும் போது, தொடர்பில்லாத குழுக்கள் ஒரே வீட்டில் வசதிகளைப் பகிர்ந்து கொள்ள நேரிடலாம். இது புதிய எதிர்வினையைத் தூண்டலாம் என்ற கவலை நிலவுகிறது.

பிரிட்டனின் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு, குடியேற்ற எதிர்ப்பு உணர்வுகள் வெறும் குரலாக இல்லாமல், முக்கிய அரசியல் பாதையாக மாறிவரும் சூழலைச் சமாளிப்பதே பெரும் சவாலாக மாறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு