'100 ரன் வித்தியாசம்' - வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா உலகக் கோப்பை சாம்பியன்
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது.
இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ஹராரேவில் நடந்த போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து வெற்றி பெற 412 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது.
ஆனால் இங்கிலாந்து அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இறுதிப் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை
இருப்பினும், இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. ஆரோன் ஜார்ஜ் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அப்போது இந்தியாவின் ஸ்கோர் நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே.
ஆனால் பின்னர், தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, கேப்டன் ஆயுஷ் மத்ரேவுடன் இணைந்து, இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை எதிர்த்துப் போராடி, 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களின் உதவியுடன் வெறும் 55 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார்.
இருப்பினும், கேப்டன் ஆயுஷ் மத்ரே 51 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும், வைபவ் தனது சதத்தை எட்டிய பிறகு தனது ரன் குவிப்பு வேகத்தை அதிகரித்தார்.
பட மூலாதாரம், Getty Images
வைபவ் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து, 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்சர்கள் உட்பட ஒரு அபாரமான இன்னிங்ஸுடன் ஒரு பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டார்.
வெந்தாத் திரிவேதி 32 ரன்கள் எடுத்தார், விஹான் மல்ஹோத்ரா 30 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியாக, அபிக்யான் குண்டு 31 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார், கனிஷ்க் செளஹான் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.
இந்த இன்னிங்ஸ் மூலம், இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 411 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை இங்கிலாந்துக்கு முன்னால் வைத்தது.
பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து இன்னிங்ஸ்
இந்த இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியின் தொடக்கம் மோசமாக இருந்தது. ஐந்தாவது ஓவரின் கடைசி பந்தில் ஜோசப் மூர்ஸ் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
பின்னர் பென் டாக்கின்ஸ் 66 ரன்களும் பென் மேயஸ் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில், இங்கிலாந்து அணி வெறும் 177 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ச்சியடைந்த நிலையில், காலேப் பால்க்னர் 67 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது பவுண்டரிகள் உட்பட 115 ரன்கள் எடுத்தார்.
பால்க்னருக்கு ஆதரவாக ஜேம்ஸ் மின்டோ 28 ரன்கள் எடுத்தார். இருப்பினும், இங்கிலாந்து 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி சார்பாக அம்ப்ரிஸ் சிறந்த பந்து வீச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஒன்பது ஓவர்களில் 56 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இது தவிர, கனிஷ்க் செளஹான் மற்றும் தீபேஷ் தேவ்வர்தன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வைபவ் சூர்யவன்ஷி ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.
பட மூலாதாரம், Getty Images
வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டும் வீரர்கள்
"14 வயதில் இவ்வளவு வலிமையா, கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை."
''குழந்தை போன்ற முகம், ஆனால் அபாரமான வலிமை"
''இது குழந்தையல்ல, நெருப்பு"
இவை, இந்திய கிரிக்கெட்டின் புதிய நட்சத்திரமான 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றி சமூக ஊடகங்களில் குவிந்த எண்ணற்ற கருத்துகளில் சில.
வெள்ளிக்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி தனது சாதனையால் மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து, 15 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகளுடன் அவர் சாதனை படைத்துள்ளார்.
அவரது சிக்ஸர்களும், தோள்களின் வலிமையும் கிரிக்கெட் நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தின.
கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே எக்ஸ் தளத்தில், "இன்று நான் பார்த்ததை என்னால் நம்ப முடியவில்லை. இந்தப் பையன், அவன் ஒரு சிறுவன்தான், ஆனால் உண்மையிலேயே அற்புதமானவன் " என்று எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், "இன்று அவர் உண்மையிலேயே சூரியனைப் போல பேட்டிங் செய்தார். வேகமானவர், திகைப்பூட்டுபவர் மற்றும் யாராலும் தடுக்க முடியாதவர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அனைத்தையும் முயற்சித்தனர், ஆனால் சூரியனை யாராலும் தடுக்க முடியாது" என்று பதிவிட்டார்.
"வைபவ் சூர்யவன்ஷியிடமிருந்து ஒரு அற்புதமான இன்னிங்ஸ் கிடைத்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தது உண்மையிலேயே அசாதாரணமானது. அவரது நோக்கம், வேகம் மற்றும் டைமிங் நாள் முழுவதும் தெளிவாகத் தெரிந்தது" என்று கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பதிவிட்டார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இயன் பிஷப், "வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அவர் சிறப்பு வாய்ந்தவர் என்று தெரியும். இன்று அவர் அதை மீண்டும் நிரூபித்துள்ளார். 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் உட்பட 80 பந்துகளில் 175 ரன்கள். 150 ரன்கள் பவுண்டரிகள் மூலமாகக் கிடைத்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
நீரஜ் என்ற நபர், "14 வயதில் இவ்வளவு வலிமையா, கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Ashley Allen-ICC/ICC via Getty Images
2025 ஆம் ஆண்டில் வெளிப்பட்ட அபார திறன்
2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இடையே நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்கள் எடுத்து ஒரு சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார்.
இந்த இன்னிங்ஸில், வைபவ் 14 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளை விளாசினார்.
டிசம்பர் மாதத்தில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில் மகாராஷ்டிராவிற்கு எதிராக வைபவ் ஒரு சிறப்பான சதத்தை அடித்தார். அவர் 61 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம், சையத் முஷ்டாக் அலி டிராபியில் சதம் அடித்த மிக இளைய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.
2025-ல் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி போட்டியில் பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 84 பந்துகளில் 190 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 15 சிக்ஸர்கள் மற்றும் 16 பவுண்டரிகளை அடித்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல்லில் சிறந்து விளங்கிய சூர்யவன்ஷி
2025 ஏப்ரல் 28 ஆம் தேதி, வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு முக்கியமான நாளாக இருந்தது.
அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் விளாசினார். அவர் 11 சிக்ஸர்களையும் ஏழு பவுண்டரிகளையும் பதிவு செய்தார்.
அந்த இன்னிங்ஸ் அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
அவரது அசாதாரண திறமை அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. கிரிக்கெட் உலகம் அவரது ஆட்டத்தை வியப்புடன் பார்த்தது. அவரிடம் இருந்து இத்தகைய திறமை வெளிப்பட்டதை யாராலும் நம்ப முடியவில்லை.
ரஷீத் கான், முகமது சிராஜ், இஷாந்த் சர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக, 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி பேட்டிங்கைக் கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் திகைத்துப் போனார்கள்.
அதன் பிறகு அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 40 ரன்களும், பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 57 ரன்களும் எடுத்து தனது ஆட்டத்தை மேலும் உறுதிப்படுத்தினார்.
ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி வாங்கப்படும்போது அவருக்கு 13 வயதுதான். 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்து ராஜஸ்தான் அணி என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி பலதரப்பிலும் எழுந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை