You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மழை காலத்தில் வரும் ஈசலின் ஆயுள் ஒரு நாள் மட்டும்தானா? அதை சாப்பிடலாமா?
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பருவமழை மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கிவிட்டால் போதும், பல வீடுகளில் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துவிடும்.
அப்படி மழையின்போது வீட்டு உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் வரும் ஈசல்களைப் பிடித்து இறக்கைகளை பிய்த்துவிட்டு மூங்கில் கூடை ஒன்றில் சேகரிப்பதை ஊர்ப்புறங்களில் பார்த்திருப்போம்.
ஒரு கூடை நிறைய ஈசல் சேர்ந்த பிறகு அவற்றை வாணலியில் நன்கு வறுத்தெடுப்பார்கள். அப்போதே, ஈசல்களின் தலை தனியே உடல் தனியே பிரிந்துவிடும்.
பின்னர், தலை மற்றும் மீதமுள்ள இறக்கையை முறம் கொண்டு புடைத்து பிரித்துவிட்டு, வறுக்கப்பட்ட ஈசலை பொறியில் கலந்து சாப்பிடுவது, பொடியாக்கி உணவுடன் சேர்த்துக் கொள்வது எனப் பல வடிவங்களில் அது உணவாகிறது.
ஆனால், இந்த ஈசல்கள் எப்போதும் மழை நேரத்தில் மட்டுமே வருவது ஏன்? அவற்றின் மொத்த ஆயுளே ஒருநாள்தான் என்பது உண்மையா? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா?
அதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள பூச்சியியல் ஆய்வாளர்களிடம் பேசினோம்.
ஈசல்கள் எங்கிருந்து வருகின்றன?
ஈசல் என்பது ஒரு தனிப்பட்ட பூச்சியினம் கிடையாது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உண்மையில், இறக்கைகள் முளைத்த கரையான்களே ஈசல்கள். அவ்வளவு ஏன், கரையான்களின் அடுத்த சந்ததிகள் பிறப்பதற்கே ஈசல்கள்தான் அடிப்படைக் காரணமாகத் திகழ்கின்றன.
கரையான்கள், எறும்புகளைப் போலவே ஒரு சமூகமாக வாழும் பண்புடையவை. ஒரு புற்றில் சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை என்ற எண்ணிக்கையில் கரையான்கள் வாழக்கூடும்.
தேனீக்கள், எறும்புகள் போன்ற கூட்டு சமுதாய வாழ்க்கை முறையைக் கொண்ட பிற பூச்சிகளைப் போலவே கரையான்களிலும் ஒரு புற்றில் ராணி, ராஜா, வேலைக்கார கரையான்கள், காவல்கார கரையான்கள் ஆகிய நான்கு பிரிவுகளாக அவை வாழ்கின்றன.
அதில், அந்தப் புற்று உருப்பெறக் காரணமாக இருக்கும் ராணி கரையான் நிமிடத்திற்கு 25 முட்டைகள் முதல் நாளொன்றுக்குச் சில ஆயிரம் முட்டைகள் வரை இடுகின்றன.
தேனீக்கள், எறும்புகள் போன்ற சமூக வாழ்வுமுறை கொண்ட பிற பூச்சிகளில் இல்லாத ஒரு தனித்துவம் கரையான்களுக்கு உள்ளது.
"பொதுவாக, இனப்பெருக்க செயல்பாடுகள் முடிந்தவுடன் ஆண் எறும்பு அல்லது ஆண் தேனீ இறந்துவிடும். ஆனால், கரையான்களைப் பொறுத்தவரை ராணி, ராஜா இரண்டும் சேர்ந்துதான் ஒரு புற்றையே உருவாக்குகின்றன" என்றார், பெங்களூருவில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்ம ராஜன்.
மேலும், "ராணி கரையானின் உடலில் விந்தணுவை சேகரித்து வைக்கும் தன்மை இல்லை என்பதால், ராஜா கரையான் அதனுடனே இருந்து பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும்" என்றும் விளக்கினார்.
அதுமட்டுமின்றி, ஒரு புற்றில் முதன்மையாக ராணி, ராஜா இருப்பதைப் போலவே, இரண்டாவது, மூன்றாவது நிலைகளில் சில ஆண் மற்றும் பெண் கரையான்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
"ஒருவேளை புற்றின் முக்கிய அங்கமாக இருக்கும் ராஜாவோ, ராணியோ இறந்துவிட்டால், அவர்களின் இடத்தை நிரப்பிக் கொள்வது இந்த இரண்டாம் நிலை ஆண், பெண் கரையான்களின் வேலையாக இருக்கும். அதன்மூலம், ஒரு புற்று பல்லாண்டுக் காலத்திற்குப் பற்பல சந்ததிகளைக் கொண்டு செழுமை பெற அவற்றின் சமூகக் கட்டமைப்பு உதவுகிறது."
பல கரையான் புற்றுகள் நன்கு உயர்ந்து நிற்பதைப் பல இடத்தில் பார்த்திருப்போம். இனி அதைப் பார்க்கையில், அந்தப் புற்று அவ்வளவு அதிகமான சந்ததிகளைப் பார்த்துள்ளது எனப் புரிந்து கொள்ளலாம்.
இப்படிப்பட்ட சுவாரஸ்யமான கரையான் புற்று உருப்பெறுவதில் முக்கியப் பங்கு வகிப்பதே மழைக் காலத்தில் கூட்டம் கூட்டமாக வீடுகளை மொய்க்கும் ஈசல்கள்தான்.
ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்?
முனைவர் பிரியதர்ஷனின் கூற்றுப்படி, ஒரு புற்றில் அதன் தோற்றம் மற்றும் நீட்சிக்குக் காரணமாக இருக்கும் ராணி, ராஜா கரையான்கள் மட்டுமின்றி, மேலும் பல ஆண், பெண் கரையான்கள் இனப்பெருக்க திறனுடன் இருக்கும்.
அவை, "மழைக் காலத்தின்போது வெளியேறி வந்து உயரப் பறந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அப்படி இறக்கைகளுடன் புற்றுகளில் இருந்து வெளியேறி வரும் கரையான்களையே ஈசல்கள் என அழைக்கிறோம்," என்று விவரித்தார் அவர்.
இதுகுறித்து விரிவாகப் பேசிய பூச்சியியல் ஆய்வாளர் சஹானாஸ்ரீ ராமகிருஷ்ணய்யா, "இனப்பெருக்கம் செய்து புதிய புற்றுகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஈசல்கள் தாங்கள் ஏற்கெனவே வாழ்ந்து வந்த புற்றுகளை விட்டு வெளியே வருகின்றன," என்றவர், அவை அதற்கு உகந்த காலமாக மழைக் காலத்தை தேர்வு செய்வது ஏன் என்பது குறித்தும் விளக்கினார்.
மழைக்காலம் மிகவும் ஈரப்பதம் நிறைந்திருக்கும். ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் கலவை அவற்றுக்கு உகந்த சூழ்நிலையை வழங்குவதாகக் கூறுகிறார் சஹானாஶ்ரீ.
மழைக்காலம் ஈசல்களுக்கு மட்டுமின்றி பெரும்பாலான உயிரினங்களின் இனப்பெருக்க காலமாகவும் இருக்கிறது. மழையின்போது அதிகளவில் உணவு கிடைப்பதும் அதற்கான ஒரு காரணமாக இருக்கிறது.
இவற்றோடு ஈசல்களைப் பொறுத்தவரை, "மழைக்குப் பிறகு நில அமைப்பு ஈரப்பதம் கொண்டு, மண் நிறைவுற்று இருக்கும். அதன் விளைவாக மண் மென்மையான தன்மையில் இருப்பதால், புதிதாக இணைந்த கரையான் ஜோடிகள் துளையிட்டுப் புதிய புற்றைக் கட்டுவது எளிதாகிறது," என்று விவரித்தார் சஹானாஸ்ரீ.
அவரிடம் ஈசல்களின் ஆயுள் ஒருநாள்தான் என்று கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, "அது உண்மையில்லை" என்று தெரிவித்தார்.
"பொதுவாக பல ஆயிரம் ஜோடிகள் புற்றை விட்டு இனப்பெருக்கம் செய்யக் கிளம்பினாலும், இறப்பு விகிதம் அதிகம் என்பதால் அதில் குறைந்த அளவிலானவையே உயிர் பிழைத்து, புற்று அமைக்கின்றன. எனவே பல நூறு ஈசல்கள் விரைவில் மடிவதைப் பார்த்ததன் அடிப்படையில் இந்தக் கட்டுக்கதை உருவாகியிருக்கலாம்."
ஈசல்களை மக்கள் உணவாகச் சாப்பிடலாமா?
புற்றை விட்டு வெளியே வரும் ஈசல்களின் இறப்பு விகிதம் அதிகளவில் இருப்பதற்கு, பறவைகள், வேட்டையாடிப் பூச்சிகள், தவளை போன்ற வேட்டையாடி உயிரினங்கள் பலவும் காரணமாக இருக்கின்றன.
அதேவேளையில் அவற்றின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு மனிதர்களும் ஒரு காரணம் என்கிறார் பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன்.
இந்தியாவின் பல பகுதிகளில் ஈசல்களை உணவாகக் கொள்ளும் பழக்கம் பல்வேறு கலாசாரங்களில் இருப்பதாகக் கூறுகிறார் சஹானாஸ்ரீ.
"மழை நேரத்தில் ஈசல்கள் அதிக எண்ணிக்கையில் வெளியே வரும்போது அவற்றை உணவுக்காக கிராமப்புறங்களில் மக்கள் சேகரிப்பார்கள். சில இடங்களில், அவற்றை உலர்த்தி, வறுத்து கொள்ளுப் பருப்பு போன்ற தானியங்களுடன் கலந்து பயன்படுத்துவது உண்டு."
ஈசல்கள் ஒரு காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த, சுவைமிக்க உணவாகக் கருதப்பட்டது எனக் கூறும் சஹானா, "இது கிராமப்புற உணவு மரபுகளுக்கும் நிலையான புரத மூலங்களுக்கும் இடையிலுள்ள ஆழமான தொடர்பைப் பிரதிபலிப்பதாக" குறிப்பிட்டார்.
ஈசல்களை உணவாகச் சாப்பிடுவது நல்லதா, அவை உண்மையாகவே புரதம் நிறைந்த உணவுதானா என்று ஊட்டச்சத்து நிபுணர் பிரியங்காவிடம் கேட்டபோது, "அவற்றை உணவாக உட்கொள்ளும் பழக்கம் பல்வேறு பகுதிகளில் இன்றளவும் உள்ளது. கோழி, ஆடு, மாடு ஆகியவற்றைச் சாப்பிடுவது போலத்தான் இவையும்.
எனவே, ஈசல்களை சுகாதாரமான முறையில் உட்கொள்வதால் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. அதோடு அவை புரதம் மிக்க உணவு எனச் சொல்லப்பட்டாலும், அதுகுறித்த அறிவியல்பூர்வ ஆய்வுகள் இந்தியாவில் இன்னும் விரிவாகச் செய்யப்படவில்லை," என்று தெரிவித்தார்.
இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேகாலயா, அசாம் போன்ற மாநிலங்களில் இன்றளவும் ஈசல்களை உணவாகப் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு