You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது' - உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
வருமான வரித் துறையால் தனக்கு விதிக்கப்பட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் அபராதத்தை ரத்துசெய்ய வேண்டுமென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. நிவாரணம் கோரி தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் கூறியுள்ளது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 2015 -16ஆம் நிதியாண்டில் தனக்குக் கிடைத்த கூடுதல் வருவாயான 15 கோடி ரூபாய் குறித்த விவரத்தை தானாக முன்வந்து தெரிவிக்காததாக வருமான வரித் துறை 2022ஆம் ஆண்டில் அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அபராதம் விதிக்கப்படவில்லையென்பதால் இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, குறிப்பிட்ட காலத்திற்குள் தான் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
விஜய் தரப்பு விரும்பினால், காலக்கெடு குறித்த விவகாரத்தைத் தவிர்த்து வேறு விஷயங்களை முன்வைத்து மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
2015ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனைகளை நடத்தி சில ஆவணங்களைக் கைப்பற்றியது. அந்த ஆவணங்களின்படி, 2015ஆம் ஆண்டில் புலி திரைப்படத்தைத் தயாரித்த பி.டி. செல்வகுமாரும் ஷிபு என்பவரும் அந்தப் படத்திற்காக காசோலை மூலம் 16 கோடி ரூபாயும் ரொக்கமாக 4.93 கோடி ரூபாயும் அளித்திருந்தது தெரியவந்தது.
காசோலை மூலம் கொடுக்கப்பட்ட பணத்திற்கு வருமான வரி (TDS) செலுத்தப்பட்டிருந்தது. ஆனால், ரொக்கப் பணத்திற்குச் செலுத்தப்படவில்லை.
இது குறித்து விஜய்யிடம் கேட்டபோது 5 கோடி ரூபாய் ரொக்கமாகப் பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்ட அவர், அதற்கான வரியைச் செலுத்தவும் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த ஐந்து கோடி ரூபாய் உள்பட கணக்கில் வராமல் 15 கோடி ரூபாயை பெற்றதாகவும் அதற்கான வரியைச் செலுத்தவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி 2016 - 17ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தார். அதில் அவரது வருவாய் 35.42 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ரசிகர் மன்றத்திற்குச் செய்த செலவாக சுமார் 64.71 லட்ச ரூபாயையும் சில சொத்துகளின் மதிப்பு குறைந்ததற்காக 17.81 லட்ச ரூபாயையும் வரி விலக்கிற்காகக் கோரியிருந்தார்.
ஆனால், வருமான வரித் துறை அதனை ஏற்கவில்லை. 38.25 கோடி ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டுமென்றும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்காவிட்டால், அவர் இந்தக் கூடுதல் வருவாயை கணக்கில் காட்டியிருக்க மாட்டார் என்றும் கூறியது. இதற்காக அவருக்கு வருமான வரி சட்டங்களின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்தே விஜய் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
வருமான வரித்துறை தரப்பு கூறியது என்ன?
இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்துவந்தார். இந்த வழக்கில் வருமான வரித்துறைக்காக வாதாடிய வழக்கறிஞர் வருமான வரிச் சட்டங்களின் படி, சரியான முறையிலேயே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அதனால் விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் அவர் வாதாடினார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அபராதம் விதிப்பதற்கான நடைமுறைகள் 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பாகவே துவங்கியிருக்க வேண்டுமே தவிர 2022 ஜூன் 30 முன்பாக அல்ல என்று வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜனவரி 23ஆம் தேதி வழக்கின் விசாரணையை முடித்து, தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.
அதைத் தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 6) விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு