காமன்வெல்த் 2022: டேபிள் டென்னிசில் பதக்கங்கள் குவிக்கும் தமிழக வீரர்கள் - யார் இவர்கள்?

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

காமன்வெல்த் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத் கமல் தங்கம் வென்றுள்ளார். முன்னதாக ஆடவர் இரட்டையர் பிரிவில் சரத்கமல், சத்யன் ஞானசேகரன் ஆகிய இருவரும் தங்கம் வென்றனர். தமிழகத்தை சேர்ந்த இந்த இரு வீரர்களும் யார்? இவர்களது பின்னணி என்ன?

அச்சந்த ஷரத் கமல் 1982ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதியன்று பிறந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், குடும்பத்தில் ஏற்கெனவே டேபிள் டென்னிஸ் விளையாட்டு இருந்ததைத் தொடர்ந்து, இவரும் அதில் சிறு வயதிலிருந்தே ஈடுபடத் தொடங்கினார். ஷரத்தின் தந்தை சீனிவாச ராவ், மாமா முரளிதர் ராவ் ஆகியோர் இவருக்கு இளம் வயதிலிருந்தே டேபிள் டென்னிஸ் விளையாடப் பயிற்றுவித்தனர்.

ஷரத் கமலுக்கு நான்கு வயதிலேயே இந்த விளையாட்டு அறிமுகமானது. இருப்பினும், அவருக்கு 15 வயது இருக்கும்போது, படிப்பைத் தொடர்ந்து முடித்து ஒரு பொறியாளராவதா அல்லது தொழில்முறை டேபிள் டென்னிஸ் வீரர் ஆவதா என்ற கடினமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது.

சென்னையைச் சேர்ந்த வீரர்

கடைசியில், ஷரத் டேபிள் டென்னிஸை தேர்ந்தெடுத்தார். "அவர் அதைத் தனது வாழ்வின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாகக் கருதுகிறார்" என்று ஒலிம்பிக் இணையதளத்தில் அவர் பற்றிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான போட்டிகளில் இவருடைய வெற்றியைத் தொடர்ந்து, 2003ஆம் ஆண்டில், முதல் முறையாக தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தேசிய அளவிலான சாம்பியன் ஆனார்.

2004 முதல் 2019 வரை, அவர் 8 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 2007ஆம் ஆண்டு அச்சந்த ஷரத் கமல், வட கொரியாவின் பியோங்யாங் இன்விடேஷனல் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்ற முதல் இந்தியரானார்.

2010ஆம் ஆண்டு, ஜெர்மன் மேஜர் டேபிள் டென்னிஸ் லீக்கான புண்டேஸ்லிகாவில் ஷரத் பங்கேற்றார்.

சர்வதேச அளவில் முதல்முறையாக, 2004ஆம் ஆண்டு ஏதன்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார். அதே ஆண்டில், மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 16ஆவது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில், முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் இவர்.

2006ஆம் ஆண்டு, மெல்போர்ன் காமன்வெல்த் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் வில்லியம் ஹென்செலை வீழ்த்தி மற்றுமொரு தங்கப்பதக்கத்தை வென்றார்.

2010ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில், சுபஜித் சாஹாவுடன் இணைந்து ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்துள்ளார்.

சத்யன் ஞானசேகரன்

சென்னையைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன், 1993ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி பிறந்தவர். சென்னையைச் சேர்ந்த இவருடைய பெற்றோர், இவர் பொறியியல் படித்ததும், அந்தத் துறையிலேயே பணியாற்ற வேண்டுமென்று விரும்பினர்.

ஆனால், அவர் டேபிள் டென்னிஸ் விளையாடுவதைப் பார்த்த முன்னாள் டேபிள் டென்னிஸ் வீரர் சுப்பிரமணியன் ராமன், விளையாட்டுத் துறையில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கினார். அதை ஏற்று, தொழில்முறை டேபிள் டென்னிஸ் வீரராகும் முயற்சியில் சத்யன் தனது விடாமுயற்சியைத் தொடர்ந்தார்.

அவருக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை கிடைக்கவே, அவரால் முழு நேரமாக டேபிள் டென்னிஸ் மீது கவனம் செலுத்த முடிந்தது. தொடர்ந்து மாநில அளவிலும் தேசிய அளவிலும் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

2019-ஆம் ஆண்டு சர்வதேச டேபிள் டென்னிஸ் ஃபெடரேஷனின் பிளாடினம் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து, மீண்டும் மஸ்கட்டில் சர்வதேச டேபிள் டென்னிஸ் ஃபெடரேஷன் சேலஞ் ப்ளஸ் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

2021ஆம் ஆண்டு பிப்ரவரியில், தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் 9 முறை சாம்பியனான ஷரத் கமலை தோற்கடித்து தேசிய சாம்பியன் ஆனார்.

சத்யன், 2011ஆம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் அறிமுகமாகி, வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

2016இல் பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச டேபிள் டென்னிஸ் ஃபெடரேஷன் சேலஞ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தனது முதல் சர்வதேச தங்கப் பதக்கத்தை வென்றார். ஓராண்டு கழித்து, ஸ்வீடனில் நடந்த சர்வதேச டேபிள் டென்னிஸ் ஃபெடரேஷன் மேஜர் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் பல்கேரியாவில் நடந்த மேஜர் போட்டியில் அதே பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

2017ஆம் ஆண்டு ஐடிடிஎஃப் சேலஞ்சில், ஸ்பெயினில் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஏப்ரல் 2018ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் முதல்முறையாகக் கலந்துகொண்டு, முறையே ஆண்கள் பிரிவு, ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றார். அதே ஆண்டு, அவர் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Asian Games) முதல்முறையாக அறிமுகமானார். அங்கு இந்திய ஆண்கள் அணி, 60 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றில் வெண்கலப் பதக்கத்தை வென்றது.

2019ஆம் ஆண்டில், அவர் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் போட்டியிட்டு, காலிறுதியை அடைந்தார். 43 ஆண்டுகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியை எட்டிய முதல் இந்தியர் ஆனார்.

மார்ச் 2021ஆம் ஆண்டில், சத்யன் ஞானசேகரன் 2021 டோக்யோ ஒலிம்பிக்ஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டு தொடர் வெற்றிகளுடன் தனது முதல் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். தோஹாவில் நடந்த ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் தெற்காசியா குழுவில் முதலிடம் பெற்றார்.

பல விளையாட்டு வீரர்கள், பயிற்சி கூட்டாளிகள் இல்லாததால் தங்கள் பயிற்சிகளைக் குறைத்தனர். ஆனால், சத்யன் ஞானசேகரன் அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.

பயிற்சிக் கூட்டாளி இல்லாத நிலையில், தனது திறமைகளைக் கூர்மையாக வைத்திருக்க உதவும் தானியங்கி ரோபாவான பட்டர்ஃபிளை அமிகஸ் பிரைமை பயன்படுத்துகிறார்.

இவர்களின் காமன்வெல்த் வெள்ளிப்பதக்க வெற்றிக்கு இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இடுகைகளை பகிர்ந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: