You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு பெற்ற மகளை கொன்ற தந்தை' - என்ன நடந்தது?
- எழுதியவர், அமரேந்திர யார்லகடா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
குறிப்பு: இந்தச் செய்தியில் உள்ள விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
மூன்று குழந்தைகள் இருந்தால் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் தந்தை ஒருவர் தனது மகளைக் கொலை செய்துள்ளார் என தெலங்கானாவின் நிஜாமாபாத் போலீசார் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாண்டுரங்க கொண்டமங்கலே என்பவர் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆறு வயது மகள் பிராச்சி கொண்டமங்கலே தெலங்கானா பகுதிக்கு அழைத்து வரப்பட்டு கொலை செய்யப்பட்டதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்த விவரங்களை நிஜாமாபாத் காவல்துறை ஆணையர் பி. சாய் சைதன்யா பிப்ரவரி 2-ஆம் தேதி ஊடகங்களுக்கு விளக்கினார்.
கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை உடல்
தெலங்கானாவின் ஏடப்பள்ளி நிஜாம்சாகர் கால்வாயில் சிறுமியின் உடல் இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
சந்தேகத்திற்கிடமான மரணம் என்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
உதவிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்
குழந்தையின் அடையாளத்தை கண்டறியும் முயற்சியாக காவல்துறை வெளியிட்ட அறிவிப்பை, சுதீர் என்ற காவலர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்தார்.
அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை மகாராஷ்டிராவின் முகேத் தாலுகாவில் உள்ள குழந்தையின் உறவினர்கள் பார்த்துள்ளனர். அந்தச் சிறுமி குறித்த விவரங்கள் தங்களுக்குத் தெரியும் என்று அவர்கள் கூறினர்.
அந்தச் சிறுமி மகாராஷ்டிராவின் முகேத் தாலுகாவில் உள்ள கேரூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறு வயது பிராச்சி கொண்டமங்கலே என கண்டறியப்பட்டார்.
பிராச்சியின் தந்தை பாண்டுரங்க கொண்டமங்கலே என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். பிராச்சியும் மற்றொரு குழந்தையும் இரட்டையர்கள்.
பாண்டுரங்க கொண்டமங்கலே தனது கிராமத்தில் சலூன் கடை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு மகாராஷ்டிராவில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கேரூர் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக கணேஷ் ஷிண்டே உள்ளார்.
வரவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் கிராமத்தின் இடஒதுக்கீடு மாறுவதால், கணேஷ் ஷிண்டே தனக்கு நன்கு அறிமுகமான பாண்டுரங்கவை போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளார்.
"அவர் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், தனது பேச்சைக் கேட்பவரை பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் வெற்றி பெறச் செய்ய விரும்புகிறார். அதன் ஒரு பகுதியாக, அவர் பாண்டுரங்கவிடம் பேசி, அந்தப் பதவிக்குப் போட்டியிட அவரைச் சம்மதிக்க வைத்தார்" என்று போதன் கிராமப்புற சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஜய் பாபு பிபிசியிடம் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட மூன்று குழந்தைகள் இருப்பவர்கள் தகுதியற்றவர்கள் என்ற விதி உள்ளது.
போட்டியில் தான் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று நினைத்த பாண்டுரங்க, தனது மூன்று குழந்தைகளில் ஒருவரை கொல்ல கணேஷ் ஷிண்டேயுடன் சேர்ந்து ஒரு திட்டத்தைத் தீட்டியதாக நிஜாமாபாத் காவல்துறை ஆணையர் சாய் சைதன்யா தெரிவித்தார்.
தத்து கொடுக்க முயற்சி
மூன்று குழந்தைகளில் ஒருவரைத் தத்து கொடுக்க அவர்கள் முதலில் திட்டமிட்டதாகவும், ஆனால் தத்து கொடுப்பது தொடர்பான கடுமையான விதிகள் காரணமாக அவர்கள் அந்த முயற்சியைக் கைவிட்டதாகவும் காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
இறுதியாகப் பிராச்சியைக் கொன்றுவிட்டால், தனக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள் என்றும், அதன் பிறகு தான் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் பாண்டுரங்க நினைத்ததாகக் காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
"அவர்கள் குழந்தையை பாண்டுரங்கவின் பைக்கில் அழைத்துச் சென்றனர். நிஜாம்சாகர் கால்வாயில் தள்ளிவிடப்பட்டதில் அந்தச் சிறுமி உயிரிழந்தார்" என்று ஆணையர் விளக்கினார்.
கொலை நடந்த இடத்திலிருந்து கேரூர் கிராமம் சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிறுமி வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட பைக்கை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
'கொலை செய்யத் திட்டம்'
மூன்று குழந்தைகள் இருந்தும் பிராச்சியைக் கொல்வதற்கு ஒரு வலுவான காரணம் இருந்ததாக விஜய் பாபு பிபிசியிடம் தெரிவித்தார்.
"பிராச்சி தனது தந்தை பாண்டுரங்கவின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தாள். அவள் உடனடியாக அவரிடம் சென்றுவிடுவாள். அவர் என்ன சொன்னாலும் செய்வாள். அவர் தனது மகனை வாரிசாகக் கருதியதால் அவனைக் கொல்ல விரும்பவில்லை" என்று விஜய் பாபு கூறுகிறார்.
மகாராஷ்டிராவில் வைத்துச் சிறுமியைக் கொன்றால் அடையாளம் காணப்பட வாய்ப்பு உள்ளது என்றும், அதே சமயம் அண்டை மாநிலத்தில் வைத்துக் கொன்றால் அதை ஒரு விபத்தாகச் சித்தரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் பாண்டுரங்க விசாரணையில் தெரிவித்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
குழந்தையைக் கொன்ற பிறகு அக்குழந்தை காணாமல் போனதாகப் புகாரளித்து, குழந்தை இறந்துவிட்டதாகத் தோற்றத்தை உருவாக்கி, பாண்டுரங்க தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பாண்டுரங்கவின் கூட்டாளியான கணேஷ் ஷிண்டே கைது செய்யப்பட்டுள்ளதாக நிஜாமாபாத் காவல்துறை ஆணையர் சாய் சைதன்யா தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட பாண்டுரங்க மற்றும் கணேஷ் ஷிண்டே ஆகியோரின் குடும்பத்தினரிடமிருந்து தகவல் பெற பிபிசி முயற்சித்து வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு