'தூக்கத்தில் அலறுவேன்' - சிரியாவின் அலவைட் சமூக பெண்களை குறிவைத்து நடத்தப்படும் கடத்தல், பாலியல் வன்கொடுமை

    • எழுதியவர், பிபிசி அரபு சேவை
    • பதவி,
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் சங்கடம் தரக்கூடும்.

மேற்கு சிரியாவின் லதாகியா மாகாணத்தில் உள்ள தனது கிராமத்தில், ஒரு வெப்பமான கோடை நாளில் ரமியா தனது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ஒரு வெள்ளை கார் அங்கு வந்ததாக அவர் கூறினார்.

அரச பாதுகாப்புப் படையினர் என்று கூறிக்கொண்ட ஆயுதம் ஏந்திய மூன்று நபர்கள் காரில் இருந்து இறங்கி, அவரை வலுக்கட்டாயமாக வாகனத்திற்குள் இழுத்துச் சென்றதாக, பாதுகாப்பு மற்றும் அடையாளத்தை மறைப்பதற்காகப் பெயர் மாற்றப்பட்ட அந்த இளம்பெண் பிபிசி உலக சேவையிடம் தெரிவித்தார்.

அந்த நபர்கள் தன்னைத் தாக்கியதாகவும், தான் அழவும் அலறவும் தொடங்கியபோது இன்னும் பலமாக அடித்ததாகவும் அவர் கூறினார்.

"அவர்களில் ஒருவர் நான் சன்னி பிரிவா அல்லது அலவைட் பிரிவா என்று கேட்டார். நான் அலவைட் என்று சொன்னதும், அவர்கள் அந்தப் பிரிவை இழிவுபடுத்தத் தொடங்கினர்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில் பஷர் அல்-அசத்தின் சர்வாதிகார ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு, கடத்தப்பட்டதாகப் புகாரளிக்கப்பட்ட பல பெண்களில் ரமியாவும் ஒருவர்.

பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் சிரிய பெண்ணிய லாபி (எஸ்எப்ஃஎல்) என்ற அமைப்பு, குடும்பங்கள், ஊடகங்கள் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாகப் பதிவுகளைப் பெற்றுள்ளதாகக் கூறுகிறது. அவற்றில் 26 வழக்குகள் கடத்தல்கள் என்பதை உறுதி செய்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் அலவைட் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஷியா இஸ்லாத்தின் ஒரு கிளையான இது சிரியாவின் மக்கள் தொகையில் சுமார் 10% பங்கு வகிக்கிறது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அதிபரும் அதே பிரிவைச் சேர்ந்தவர்.

பிரிவினைவாத வன்முறை

இரண்டு அலவைட் பெண்களும், மேலும் மூவரின் குடும்பத்தினரும் கடத்தல் மற்றும் தாக்குதல் குறித்த விவரங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டனர். தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன.

காவல் துறைக்கு பொறுப்பான இடைக்கால அரசாங்கத்தின் பொது பாதுகாப்பு சேவை, இதுகுறித்து முழுமையாக விசாரிக்கத் தவறிவிட்டதாக அவர்கள் அனைவரும் தெரிவித்தனர். தான் அனுபவித்த கொடுமையைப் பற்றிப் புகாரளித்தபோது அதிகாரிகள் தன்னை கேலி செய்ததாக ஒரு பெண் கூறுகிறார்.

உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நவம்பர் மாதம் கூறுகையில், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 42 சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதில் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் "தவறானவை" என்று கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்தார். பிபிசி இதுகுறித்து கருத்து கேட்க தொடர்பு கொண்டபோது, மேலதிக கருத்து எதுவும் இல்லை என்று அமைச்சகம் தெரிவித்தது. இருப்பினும், கடத்தல் சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், அதில் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் சிலரும் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஒரு நபர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சிரிய பெண்ணிய லாபி (எஸ்எப்ஃஎல்) பதிவு செய்துள்ள கடத்தல் சம்பவங்கள் மற்றும் காணாமல் போதல் தொடர்பான சம்பவங்கள் 2025 பிப்ரவரி முதல் டிசம்பர் தொடக்கம் வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியவை. மேற்கு கடலோரப் பகுதிகளில் நடந்த மதக் கலவரத்தில் பெரும்பாலான அலவைட் குடிமக்கள் உள்பட 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மார்ச் மாதத்திற்கு முன்னும் பின்னும் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. அசத் ஆதரவாளர்களின் கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, சன்னி இஸ்லாமியர்கள் தலைமையிலான அரசாங்கத்திற்கு விசுவாசமான படைகள் பழிவாங்கும் கொலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அசத் ஆட்சியின் உயர்மட்டக் குழுவில் இருந்தவர்களில் பலர் அலவைட் பிரிவைச் சேர்ந்தவர்கள், ஆனால் அதே நேரம் முன்னாள் அதிபரை எதிர்த்த காரணத்திற்காக அந்தப் பிரிவின் பிற உறுப்பினர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாயினர்.

'தற்கொலை முயற்சிகள்'

உடல் முழுவதும் மூடும் துணி மற்றும் முகம் மட்டும் தெரியும்படியான நிகாப் அணிய தான் கட்டாயப்படுத்தப்பட்டதை ரமியா மெல்லிய குரலில் விவரித்தார். ஒரு படுக்கை மற்றும் அலமாரி வைக்கப்பட்டிருந்த நிலத்தடி அறை ஒன்றில் தான் அடைக்கப்பட்டு இருந்ததாகவும், அங்கு கழிவறைப் பொருட்கள் மற்றும் ஆணுறை இருந்ததாகவும் அவர் கூறினார்.

இரண்டு நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒருமுறை அங்கிருந்து தப்ப முயன்றதாகவும், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

தன்னைக் கடத்தியவருக்கு அரபு மொழி சரளமாகத் தெரியவில்லை என்றும், அவர் "ஆசிய முக ஜாடை" கொண்டவர் என்றும் ரமியா கூறினார். அவர் தனது நிகாப்பை அகற்றிவிட்டுப் புகைப்படங்கள் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே கட்டடத்தில் வசித்த, கடத்தல்காரரின் மனைவி என்று கூறிக்கொண்ட ஒரு பெண், "அவரை விற்பனை செய்வதற்கான விலையைத் தீர்மானிக்கவே" அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக விளக்கியதாக ரமியா தெரிவித்தார்.

தனக்கு முன்பே "பலர்" கடத்தப்பட்டதாகவும், அவர்களில் சிலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் "விற்கப்பட்டதாகவும்" அந்தப் பெண் தன்னிடம் கூறியதாக ரமியா பகிர்ந்துகொண்டார்.

கடத்தப்பட்ட பெண்களுக்காகப் பணம் பரிமாறப்பட்ட எந்தவொரு வழக்கையும் பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் விற்கப்படுவோம், அல்லது கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுவோம் என்பன போன்ற மிரட்டல்களைச் சந்தித்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

'பலமுறை பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது'

முப்பது வயது நிரம்பிய தாயான நெஸ்மா, லதாகியா மாகாணத்தில் உள்ள தனது கிராமத்தில் இருந்து திரைச்சீலைகள் கொண்ட ஜன்னல்கள் உடைய வேனில் கடத்திச் செல்லப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

தொழில்துறை வசதி கொண்டதாகத் தோன்றும் உயரமான ஜன்னல்கள் உடைய அறையில் ஏழு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததையும், தனது கிராமவாசிகள் மற்றும் முன்னாள் அரசாங்கத்துடனான தொடர்புகள் குறித்து மூன்று நபர்களால் விசாரிக்கப்பட்டதையும் விவரிக்கும்போது தொலைபேசியில் அவரது குரல் நடுங்கியது.

தன்னைக் கடத்தியவர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்ததாகவும், சிரிய அரபு மொழியில் பேசியதாகவும் அவர் கூறினார். "அலவைட் பெண்கள் 'சபாயாக்களாக' இருப்பதற்காகவே படைக்கப்பட்டவர்கள்" என்று அவர்கள் தன்னிடம் கூறியதாக அவர் கூறுகிறார். 'சபாயா' என்பது "பெண் கைதிகள்" என்பதைக் குறிக்கும் ஒரு பழங்கால அரபுச் சொல்லாகும். இது சில இஸ்லாமிய ஆயுதக் குழுவினரால் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் பெண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

தன்னைக் கடத்தியவர்கள் தன்னைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறினார். "நான் மரணத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தேன், நான் இறந்து என் குழந்தையைத் தாயில்லாமல் விட்டுவிடுவேன் என்று நினைத்தேன்" என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

மற்றொரு இளம்பெண்ணான லீன், அடி உதைகள், துப்பாக்கி முனையில் மிரட்டல்கள் மற்றும் தினசரி பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்ததாக அவரது தாய் ஹஸ்னா பிபிசியிடம் தெரிவித்தார்.

அந்தப் பெண்ணைக் கடத்தியவர் தனது முகத்தை மூடியிருந்தார், அவருக்கு அரபு மொழியைச் சரியாகப் பேசத் தெரியவில்லை, மேலும் மார்ச் மாத வன்முறையின்போது அலவைட் சமூகத்தினரைக் கொன்றதில் பங்கேற்றது குறித்துப் பெருமையாகப் பேசினார் என்று ஹஸ்னா கூறினார்.

"அந்த நபர் எங்கள் பெண்களை சபாயா என்று அழைப்பார், ஏனென்றால் 'அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை' என்பார்" என்று ஹஸ்னா கூறுகிறார். சில சன்னி ஆயுதக்குழுவினர் அலவைட்களை மதங்களுக்கு எதிரானவர்களாகக் கருதுகின்றனர்.

பிபிசி அலி என்ற நபரிடமும் பேசியது, அவர் தனது மனைவி நூர் கடத்தப்பட்டு பல வாரங்கள் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார்.

மேலும் சோமயா என்ற தாய் தனது பதின்ம வயது மகள் "தொடர்ந்து 10 நாட்கள்" பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறினார்.

'தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்கள்'

தான் கடத்தப்பட்டதாகக் கூறச் சென்றபோது, பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை "கேலி செய்ததாகவும் மரியாதைக் குறைவாக நடத்தியதாகவும்" நெஸ்மா பிபிசியிடம் தெரிவித்தார். "நீ ஒரு சுற்றுலா சென்றதாகச் சொல்ல வேண்டும் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்" எனக் கூறுகிறார் நெஸ்மா.

ரமியா கூறுகையில், அதிகாரிகள் ஆரம்பத்தில் தனது வழக்கில் ஆர்வம் காட்டுவது போலத் தெரிந்தாலும், கடத்தல்காரரை அடையாளம் கண்டவுடன் தனது அழைப்புகளை ஏற்பதை நிறுத்திவிட்டனர் என்கிறார். "நாங்கள் பேசினால் அதற்கான விலையைத் தர வேண்டியிருக்கும்" என்று தொலைபேசி மூலம் குடும்பத்தினருக்கு மிரட்டல்கள் வந்தன என்று அவர் கூறினார். இதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர்.

அலி பிபிசியிடம் கூறுகையில், "அவர்கள் கடத்தல்காரரைக் கைது செய்தார்கள், ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை." கடத்தல்காரர் விடுவிக்கப்படலாம் என்றும், அவர் "எங்களைத் தேடி வருவார்" என்றும் தான் அஞ்சுவதாக அவர் கூறினார்.

லீனின் தாய் கூறுகையில், பாதுகாப்பு அதிகாரிகள் தனது மகளைப் பலமுறை "ஆர்வத்துடனும் அனுதாபத்துடனும்" விசாரித்தனர், ஆனால் பல மாதங்கள் கடந்தும் விசாரணையின் முடிவுகள் எதுவும் பகிரப்படவில்லை என்றார்.

என்ன நடந்தது என்பது குறித்து தான் புகாரளித்ததாகவும், ஆனால் எந்தத் தகவலும் வரவில்லை என்றும் சோமயா கூறுகிறார்.

நவம்பர் மாதம், பொது பாதுகாப்புச் சேவையை மேற்பார்வையிடும் சிரியாவின் உள்துறை அமைச்சகம், புகாரளிக்கப்பட்ட 42 கடத்தல் சம்பவங்கள் குறித்த தனது கண்டுபிடிப்புகள் தொடர்பாக ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது.

செய்தித் தொடர்பாளர் நூர் அல்-டின் அல்-பாபா கூறுகையில், ஒரே ஒரு வழக்கு மட்டுமே "உண்மையான கடத்தல்" என்றார். மற்றவை "சுயமாக வீட்டை விட்டு வெளியேறுதல்," "உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் தங்குதல்," "குடும்ப வன்முறையிலிருந்து தப்பித்தல்," "சமூக ஊடகங்களில் தவறான புகார்கள்" அல்லது "பாலியல் தொழில் மற்றும் மிரட்டிப் பணம் பறிப்பதில் ஈடுபடுதல்" என விளக்கப்பட்டது, அதே நேரத்தில் நான்கு வழக்குகள் "கைது செய்யப்பட்ட குற்றவியல் சம்பவங்கள்" என்றும் அவர் கூறினார்.

இத்தகைய புகார்களை அமைச்சகம் "மிகவும் தீவிரமாகவும், பொறுப்புடனும்" கையாண்டதாக அவர் வலியுறுத்தினார்.

பின்னர் நவம்பர் மாத இறுதியில், நாங்கள் திரட்டிய விவரங்களுக்குப் பதிலளிக்குமாறு பிபிசி அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டது. அதற்கு மேலதிக கருத்து எதுவும் இல்லை என்று அமைச்சகம் தெரிவித்தது.

கடலோரப் பகுதியைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர், தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பிபிசியிடம் பேசுகையில், "பணம் பறிக்கும் நோக்கத்திற்காகவோ, அல்லது கவனக் குறைவாகவோ, அல்லது முந்தைய ஆட்சி காலத்தில் இருந்து வந்த தனிப்பட்ட நோக்கங்களுக்காகவோ தற்காலிக கடத்தல்களைச் செய்யும் சில கட்டுப்பாடற்ற நபர்களின் செயல்கள் உள்ளன" என்று கூறினார்.

மேலும், இதில் பொது பாதுகாப்பு சேவை உறுப்பினர்களும் அடங்குவர் என்று அவர் தெரிவித்தார். "சில அதிகாரிகள் பழிவாங்கும் ஒரு கருவியாகக் கடத்தல் முறையைக் கையாள்கிறார்கள். சில வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிபிசியிடம் பேசிய நான்கு பெண்களுக்கும், குடும்பத்தினருக்கும் கடத்தல்காரர்கள் யார் என்று தெரியவில்லை. அது குறித்து ஒருவர் அறிந்திருந்தார், ஆனால் கடத்தலில் ஈடுபட்ட அந்த நபர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் அல்ல என்று அவர் கூறினார். இருவர் பொது மக்களின் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டதாகக் கூறினர். மற்றவர்கள் தாங்கள் ஏன் விடுவிக்கப்பட்டோம் எனத் தெரியவில்லை என்றனர்.

'தண்டனையிலிருந்து தப்பிக்கும் சூழல்'

ஜூலை மாதத்தில், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, மூன்று முதல் 40 வயது வரையிலான குறைந்தது 36 அலவைட் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டதாக நம்பத்தகுந்த அறிக்கைகளைப் பெற்றுள்ளதாகவும், எட்டு வழக்குகளை விரிவாக ஆவணப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தது.

ஆவணப்படுத்தப்பட்ட "கிட்டத்தட்ட அனைத்து" வழக்குகளிலும், அந்தக் குடும்பங்களுக்கு "விசாரணையில் அர்த்தமுள்ள எந்தத் தகவலோ அல்லது முன்னேற்றம் குறித்த நம்பத்தகுந்த உணர்வோ கிடைக்கவில்லை" என்று பிராந்திய துணை இயக்குநர் கிறிஸ்டின் பெக்கர்லே பிபிசியிடம் தெரிவித்தார்.

ஜெர்மனியை தளமாகக் கொண்டு இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கவனித்து வரும் சிரிய மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான யமன் ஹுசைன் கூறுகையில், இந்தச் சம்பவங்களைக் கடந்து வந்தவர்களின் வாக்குமூலங்கள் இந்தக் கடத்தல்கள் "தோற்கடிக்கப்பட்ட தரப்பை அவமதித்தல்" என்ற கருத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு சித்தாந்த அடிப்படையைக் கொண்டிருப்பதாகவும், "அலவைட் பெண்கள் மத்தியில் அச்சத்தைப் பரப்புவதை" நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், "தண்டனையிலிருந்து தப்பிக்கும் ஒரு பொதுவான சூழல்", சித்தாந்த நோக்கம் இல்லாத குழுக்களையும் கடத்தல்களைச் செய்ய ஊக்குவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

சிரிய பெண்ணிய லாபியின் கூற்றுப்படி, ஒரு சிறிய எண்ணிக்கையிலான ட்ரூஸ் மற்றும் சன்னி பெண்களும் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இன்னும் அலவைட் பிரிவைச் சேர்ந்த 16 பெண்கள் காணாமல் போயுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.

பிபிசி பேசிய குடும்பங்களுக்கு, வெளிப்படையாகப் பேசியதற்காகப் பழிவாங்கப்படுவோம் என்ற அச்சமும், பாலியல் வன்கொடுமையுடன் தொடர்புடைய சமூகக் கண்ணோட்டம் போன்ற இரண்டின் மீதான பயமும் நீடிக்கிறது.

லீன் தொடர்ந்து பதற்றத்துடன் வாழ்ந்து வருவதாகவும், கதவைத் தட்டும் சத்தத்தைக் கேட்டு அஞ்சுவதாகவும் அவரது தாய் தெரிவித்தார். நெஸ்மாவின் திருமண வாழ்க்கை முறிந்துவிட்டது. "நான் தூக்கத்தில் அலறுகிறேன்" என்கிறார் ரமியா. அவர் ஒரு மனநல ஆலோசகரைச் சந்தித்து வருவதாகவும், இருப்பினும் தூங்குவதற்குச் சிரமப்படுவதாகவும், "நிம்மதியைப் பெற முடியவில்லை" என்றும் கூறுகிறார்.

அலி பிபிசியிடம் கூறுகையில், தானும் நூரும் நீதியைப் பெற முயல மிகவும் அஞ்சுவதாகத் தெரிவித்தார். சோமயா தனது மகள் பள்ளிக்குத் திரும்பியிருப்பதாகவும், ஆனால் "எங்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி என்னைச் சுற்றியுள்ள யாருக்கும் தெரியாது" என்றும் கூறினார்.

"எங்களுக்கு நேர்ந்ததை நாங்கள் மறுக்கக் கூடாது, அதே நேரம் எங்களை நாங்களே ஆபத்திற்கு உள்ளாக்கிக் கொள்ளவும் கூடாது," என்கிறார் சோமயா.

இது பிபிசி உலக சேவையின் உலகளாவிய பெண்கள் தொடரின் ஒரு பகுதியாகும். உலகம் முழுவதும் இருந்து சொல்லப்படாத மற்றும் முக்கியமான கதைகளை இந்தத் தொடர் ஆவணப்படுத்துகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு