You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளி பாய்ச்சிய சீன கடற்படை கப்பல்
சீன கடற்படைக் கப்பல் ஒன்று, ஆஸ்திரேலிய போர் கப்பல் ஒன்றின் மீது "ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தரத்திலான" லேசர் ஒளியை கொண்டு பாய்ச்சியதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டுகிறது.
வடக்கு ஆஸ்திரேலியாவின் அரஃபுரா கடலில் கடந்த வியாழனன்று சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் "உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளன, சீனாவின் இத்தகைய செயல் "கண்டிக்கத்தக்கது" எனவும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.சீனா இந்த விவகாரம் தொடர்பாக எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.
ஆஸ்திரேலிய ஊடகங்கள் இதற்கு முன்னதாக சீனாவின் சிறிய கப்பல்களில் இருந்து லேசர் ஒளியைப் பாய்ச்சிய சம்பவம் நடைபெற்றிருப்பதாக கூறுகின்றன.சமீப ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மற்றும் சீனா இருநாட்டு இடையே பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன.
சீனாவால் இலக்கு வைக்கப்பட்ட விமானம் போயிங் பிஎஸ்ஏ போசிடான் (Boeing P-8A Poseidon) வகை விமானம் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இது தாக்குவதற்கான ஆயுத அமைப்புகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிவதற்கான சென்சார்கள் ஆகியவற்றை கொண்டுள்ள கடல்பரப்பு கண்காணிப்பு விமானம் ஆகும்.
ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூகினி ஆகியவற்றின் இடையே உள்ள டோரிஸ் நீரிணை வழியாகவும், கோரல் கடல் பகுதிக்கும் செல்லும் முன்பு அந்த இரண்டு சீன கடற்படைக் கப்பல்களில் ஒன்று அரஃபுரா கடலின் கிழக்குப் பகுதியில் பயணித்ததாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.
இத்தகைய நடவடிக்கைகள் ஆஸ்திரேலிய காவல் படை ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் உயிரை அச்சுறுத்தி இருக்கக் கூடியவை. தொழில்முறை நேர்த்தியுடன் இயங்கும் ராணுவங்கள் பின்பற்ற வேண்டிய தரத்தை அந்த நடவடிக்கைகள் கொண்டிருக்கவில்லை என்று அந்த அமைச்சகம் கூறுகிறது.
சீனா ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. கடந்த காலங்களில் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. எனினும் சமீப ஆண்டுகளில் இந்த உறவு முறிந்துள்ளது.
தங்கள் உள்நாட்டு அரசியலில் சீன அரசு தலையிடுவதாகக் குற்றம்சாட்டும் ஆஸ்திரேலியா சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவே ஆஸ்திரேலியாவில் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இருந்து தடைசெய்தது.
இது மட்டுமல்லாமல் சீன நகரான வூஹானில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்றின் மூலத்தை அறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய வலியுறுத்தியது.
இதற்கு எதிர்வினையாற்றிய சீன அரசு பெருந்தொற்றைக் காரணமாக கூறி ஆஸ்திரேலியாவில் இன ரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதால் தங்கள் நாட்டு மாணவர்களும் சுற்றுலாப் பயணிகளும் ஆஸ்திரேலியா செல்வதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்தது.
ஆஸ்திரேலியா பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே உருவான 'ஆக்கஸ்' எனும் புதிய பாதுகாப்பு கூட்டணி பிராந்திய அமைதியை தீவிரமாக அச்சுறுத்தும் வகையிலும் ஆயுதப் போட்டியை அதிகமாக வகையிலும் இருப்பதாக சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் சீனா கூறியது.
ஆஸ்திரேலியா தன்னைத் தானே சீனாவின் எதிரி ஆக்கிக் கொண்டது என்று சீன அரசின் குளோபல் டைம்ஸ் செய்தித்தாள் கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்