You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க பாடகர் பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு , அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான , பாப் டிலனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாரும் எதிர்பாராத இந்த அறிவிப்பை ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்வீடிஷ் அக்காடெமி அறிவித்தது.
புகழ்பெற்ற அமெரிக்க ராக் மற்றும் நாட்டுப்புற இசைப் பாடகரான, பாப் டிலன், இசையுலகில் பெரும் ஆளுமையாகத் திகழ்பவர்.
அவரது ` தெ டைம்ஸ் , தே ஆர் எ சேஞ்சிங்` , ( ( The times, they are a changin') , ' ப்லோயிங் இன் தெ விண்ட்` ( Blowing in the Wind) , லைக் எ ரோலிங் ஸ்டோன் ( ( Like a Rolling Stone) போன்ற பாடல்கள் 1960களின் மிகப் பிரசித்தி பெற்ற பாடல்களாக ஒலித்தவை. அவை போருக்கெதிரான மற்றும் சிவில் உரிமைகள் இயக்கத்துக்கு ஆதரவான முழக்கமாகவும் ஒலித்தன.
`` அமெரிக்க பாடல் பாரம்பரியத்துக்குள் புதிய கவித்துவ வடிவங்களை உருவாக்கியதற்காக`` 75 வயதாகும் டிலனுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி கூறுகிறது.
ராபர்ட் ஆலன் ஸிம்மர்மான் என்ற இயற்பெயருடன் 1941ல் பிறந்த டிலன் மின்னெசோட்டா மாநிலத்தில் காபிக் கடைகளில் பாடி தனது இசை வாழ்வைத் தொடங்கினார்.
அவருடைய மிகப் பிரபலமான படைப்புகள் எல்லாம் 1960களில் இயற்றப்பட்டவை. அந்தப் படைப்புகள் அமெரிக்காவின் அந்த காலகட்டப் பிரச்சனைகளை சம்பிரதாய பூர்வமற்ற வகையில் கூறிய வரலாற்றாளராக அவரை மாற்றின.