You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலில் கலப்படத்தை வீட்டிலேயே கண்டுபிடிக்க 5 எளிய யோசனைகள்
- எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
- பதவி, பிபிசிக்காக
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பாலில் கலப்படம் செய்யப்படுவது என்பது ஒரு தீவிரமான பிரச்னையாகும்.
சில வியாபாரிகளும் விற்பனையாளர்களும் லாபத்திற்காக, பாலில் தண்ணீரை மட்டும் கலக்காமல், அது அடர்த்தியாகத் தெரிவதற்காகத் தரம் குறைந்த அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களைச் சேர்ப்பதாகப் புகார்கள் உள்ளன.
சமீபத்தில் ஆந்திராவின் ராஜமுந்திரியில் வெளிச்சத்திற்கு வந்த பால் கலப்பட சம்பவம் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆரோக்கியத்திற்கு உகந்தது எனக் கருதப்படும் பால் இறுதியாக நம் கைகளை வந்தடையும் போது, அதன் தரம் குறித்த சந்தேகங்கள் எழுகின்றன.
அத்தகைய சூழலில், பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நாம் எவ்வாறு கண்டறியலாம்? வீட்டிலேயே என்னென்ன சோதனைகளைச் செய்யலாம்? போன்றவை குறித்து தெரிந்துகொள்வதற்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (எப்எஸ்எஸ்ஏஐ) அதிகாரிகள் மற்றும் பால் பண்ணை துறையில் பணியாற்றுபவர்களிடம் பிபிசி பேசியது.
பாலில் கலப்படம் செய்யப்படுவது எப்படி?
'பால் ஒரு சத்தான திரவ உணவு. இது குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தின் முக்கிய ஆதாரமாகும். உடல் வளர்ச்சிக்கு அவசியமான புரதங்கள், கொழுப்புகள் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பாலில் உள்ளது.
பாலில் கலப்படம் செய்வது என்பது ஒரு தீவிரமான பிரச்னை. முக்கியமாக அதிகப் பணம் ஈட்ட வேண்டும் என்பதற்காக, தரம் குறைந்த அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்கள் பாலில் சேர்க்கப்படுகின்றன. நுகர்வோர் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தும் இந்த நடைமுறைகளை 'உணவு மோசடி' என்று கருதலாம்" என்று எப்எஸ்எஸ்ஏஐ துணை இயக்குநர் சுரேஷ் உப்பரபள்ளி பிபிசியிடம் தெரிவித்தார்.
பால் கலப்படம் பல வழிகளில் நிகழலாம் என்றும், சில எளிய சோதனைகள் மூலம் யார் வேண்டுமானாலும் அதைக் கண்டறிய முடியும் என்றும் சுரேஷ் உப்பரப்பள்ளி கூறினார்.
பாலில் தண்ணீர், யூரியா, டிடர்ஜென்ட்கள், ஃபார்மலின், ஹைட்ரஜன் பெராக்சைடு போன்றவை சேர்க்கப்படுகின்றன என கூறும் அவர், பால் கலப்படம் பல வழிகளில் நிகழலாம் என்றார்.
'பாலின் அளவை அதிகரிக்க தண்ணீர் சேர்க்கப்படுகிறது. இது பாலை குறைவான அடர்த்தி உடையதாக மாற்றி சுவையைக் குறைக்கிறது. இதை மறைக்க, பாலில் சிறிதளவு ஸ்டார்ச், சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கப்படுகின்றன.'
'பால் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்க ஃபார்மலின் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்கப்படுகின்றன. இது பால் நல்ல நிறம் மற்றும் நறுமணத்துடன் ஃபிரெஷாக தோன்றுமாறு செய்கிறது.'
'ஆய்வகச் சோதனையில் புரதம் அதிகமாகத் தெரிவதற்காக யூரியாவும், கொழுப்புச் சத்து அதிகமாகத் தெரிவதற்காக மலிவான எண்ணெய்களும் சேர்க்கப்படுகின்றன. ஆனால் இவை இயற்கையான புரதங்களோ அல்லது கொழுப்புகளோ அல்ல.'
'பால் அதிக அடர்த்தியாகவும், இயற்கையான நுரை சற்று அதிகமாகவும் இருப்பது போல் தோன்றுவதற்காக டிடர்ஜென்ட்கள் சேர்க்கப்படுகின்றன.'
பாலில் கலப்படத்தை வீட்டிலேயே கண்டுபிடிக்க 5 எளிய யோசனைகள்
பாலில் கலப்படம் உள்ளதா என்பதை வீட்டிலேயே நீங்கள் கண்டறியலாம்.
பாலில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதா?: ஒரு தட்டில் அல்லது டைல்ஸ் மீது சிறிதளவு பாலை ஊற்றி கவனிக்கவும். தூய்மையான பால் அடர்த்தியாகவும் மெதுவாகவும் ஓடும். தண்ணீர் கலந்த பால் மிக வேகமாக ஓடிவிடும்.
பாலில் டிடர்ஜென்ட் சேர்க்கப்பட்டுள்ளதா ?: ஒரு பாட்டிலில் சிறிதளவு பாலை எடுத்துக்கொண்டு, அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குலுக்கவும். தூய்மையான பாலில் மெல்லிய மற்றும் குறைவான நுரையே உண்டாகும். டிடர்ஜென்ட் கலந்த பாலில் அதிக அடர்த்தியான நுரை உருவாகி நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.
பாலில் ஸ்டார்ச் சேர்க்கப்பட்டிருந்தால்...: குறைந்த அளவு பாலில் இரண்டு சொட்டு அயோடின் சேர்த்து கவனித்தால், தூய்மையான பாலின் நிறம் மாறாது. ஆனால் ஸ்டார்ச் கலந்த பால் நீலம் அல்லது கருப்பு நிறமாக மாறும்.
யூரியா சேர்க்கப்பட்டுள்ளதா?: பாலில் சிறிதளவு சோயாபீன் பவுடரைச் சேர்த்தால், தூய்மையான பாலின் மணம் மாறாது. ஆனால் யூரியா கலந்த பால் அம்மோனியா போன்ற வாசனையைத் தரும்.
செயற்கை பாலைக் கண்டறிய: உள்ளங்கையில் பாலை வைத்து தேய்க்கும் போது, தூய்மையான பால் மென்மையாகவும் இயற்கையாகவும் இருக்கும். செயற்கை அல்லது கலப்பட பால் சோப்பு போன்றும், வழுவழுப்புடனும், செயற்கையாகவும் தோன்றும்.
இவை ஆரம்பக்கட்ட அறிகுறிகள் மட்டுமே என்றும், உறுதியான முடிவுக்கு ஆய்வகப் பரிசோதனைகள் அவசியம் என்றும் சுரேஷ் உப்பரபள்ளி தெரிவித்தார்.
லாக்டோமீட்டர் மூலம் தரத்தை விரைவாக தீர்மானிக்க முடியும்
பால் பண்ணைகளில் லாக்டோமீட்டர் எனப்படும் சிறிய சாதனம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. லாக்டோமீட்டர் என்பது பாலின் அடர்த்தியை அளவிடும் ஒரு கருவியாகும்.
"பாலில் லாக்டோமீட்டரை மூழ்கச் செய்து, அது மிதக்கும் அளவை அளவிடுவதன் மூலம் பாலின் தரம் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, 20°C வெப்பநிலையில், தூய்மையான பாலின் லாக்டோமீட்டர் அளவு 26-32 வரை இருக்க வேண்டும். இந்த அளவு குறைவாக இருந்தால் தண்ணீர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அளவு அதிகமாக இருந்தால் ஸ்டார்ச் மற்றும் யூரியா போன்ற திடப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கருதலாம்," என்று விசாகா மற்றும் ஹெரிட்டேஜ் பால் பண்ணைகளில் பால் தரப் பரிசோதனை செய்யும் ஊழியர்களான ரமேஷ் மற்றும் முரளி பிபிசியிடம் தெரிவித்தனர்.
"லாக்டோமீட்டர் விரைவான முடிவைத் தருகிறது. இருப்பினும், இது அடர்த்தியை மட்டுமே அளவிடுகிறது. மேலும், இது ரசாயனக் கலப்படத்தை நேரடியாகக் கண்டறிவதில்லை. லாக்டோமீட்டர் சோதனை என்பது ஒரு ஆரம்பக்கட்ட அறிகுறி மட்டுமே. துல்லியமாகக் கண்டறிய ஆய்வகப் பரிசோதனைகள் அவசியம்," என்று முரளி குறிப்பிட்டார்.
பாலின் தரத்தை முழுமையாகத் தீர்மானிக்க கொழுப்புச் சத்து, கொழுப்பு அல்லாத திடப்பொருட்கள் மற்றும் நுண்ணுயிரியல் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று ரமேஷ் தெரிவித்தார்.
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் கலப்பட பால்
கலப்படம் செய்யப்பட்ட பாலைக் குடிப்பதோ அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை உண்பதோ உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுரேஷ் உப்பரபள்ளி தெரிவித்தார்.
தயிர், மோர், பன்னீர், நெய், ஐஸ்கிரீம், இனிப்புகள் மற்றும் பால் பவுடர் என அனைத்திலும் கலப்பட பொருட்கள் இருக்க வாய்ப்புள்ளது.
இது செரிமானப் பிரச்னைகள், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் நாள்பட்ட சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
தண்ணீர் கலந்த பால்: செரிமானப் பிரச்சனைகள்
யூரியா: சிறுநீரகங்களுக்கு அழுத்தம் மற்றும் பாதிப்பு
டிடர்ஜென்ட்கள்: குடல் அழற்சி, இரைப்பை அழற்சி
ஃபார்மலின்: நச்சுத்தன்மை வாய்ந்தது, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானது
ஸ்டார்ச்: வயிற்றுப்போக்கை உண்டாக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது
ஹைட்ரஜன் பெராக்சைடு: கடுமையான செரிமானப் பிரச்னைகள்.
சந்தேகம் இருந்தால், என்ன செய்ய வேண்டும்?
"பாலில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், அதைப் பயன்படுத்த வேண்டாம். யாராவது தெரியாமல் அதை உட்கொண்டால், வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது தலைவலி போன்ற அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைக் கவனிக்கவும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்," என்று சுரேஷ் உப்பரபள்ளி அறிவுறுத்தினார்.
கலப்படம் குறித்த சந்தேகம் ஏதேனும் இருந்தால், உள்ளூர் உணவு ஆய்வாளரிடம் புகார் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு